தேனிக்காரர் நிலை இறுகி வருவதை பார்த்து இலைத்தலைவர் ஹேப்பி ஆக இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

6 hours ago 3

‘‘நடைபாதை கடைக்கு அனுமதி கொடுக்கும் அட்ராசிட்டி யாரு..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூரில் கோட்டையை ஒட்டிய பிரதான சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அங்குள்ள கடைகளை அகற்றி அவர்களுக்கு அருகில் கோட்டையை சுற்றிச் செல்லும் சாலையில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் அந்த சாலையில் வாகனங்களிலும், தள்ளுவண்டிகளிலும் கடைகள் பெருகி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக மக்கள் மத்தியில் அதிருப்தி குரல் எழுந்திருக்கு.. இதற்கு நகரில் பிளாட்பார கடைகளுக்காக பேசும் ஒருவரே காரணம் என்று பழைய பிளாட்பார வியாபாரிகளே குற்றம் சாட்டுகிறார்களாம்.. ஒரு கடைக்கு ரூ.25 ஆயிரம் வரை பணம் வாங்கிக் கொண்டு, ‘நீ கடை போட்டுக்கோ, சங்கத்திலும் உறுப்பினராகி விடு, யாரும் கேட்க மாட்டாங்க’ என்று அட்ராசிட்டி செய்து வருகிறாராம் அந்த நபர்.. ஏற்கனவே பழைய மீன் மார்க்கெட் வளாகம் சீரமைக்கப்பட்டு அங்குள்ள பிரதான மார்க்கெட் சாலை பிளாட்பார வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு இடம்பெயர தயாராக இருக்காங்களாம்.. அதேநேரத்தில் ‘அந்த பேசும் நபர்’ மீண்டும் இந்த சாலையில் பணம் வாங்கிக் கொண்டு பிளாட்பார கடைகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைமையின் கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக நாடகம் நடத்தும் அளவுக்கு போயிட்டாராமே மாஜி அமைச்சர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் குக்கர் கட்சியில் இருந்து விலகியவர்கள், முன்னாள் அமைச்சர் மணியானவர் தலைமையில் இணைந்தாங்களாம்.. இதை பார்த்த இலைகட்சியினர் ‘இது என்ன நாடகம் போல் இருக்கு.. குக்கர் கட்சியில் இருந்து விலகி இலை கட்சியில் சேர்ந்தால் தலைமையிடத்தில் மணியானவருக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காக இதுபோல் நாடகம் ஆடுகிறார்.. தேனிக்காரர் அணியில் இருந்து விலகி சேலத்துக்காரர் அணியில் சேர்ந்த மாஜி அமைச்சரின் கை ஓங்குவதற்கு தடைக்கல்லாக, தலைமையின் கவனத்தை தனது பக்கம் இழுப்பதற்காக மணியானவர் இப்படியெல்லாம் நாடகம் நடத்தும் அளவுக்கு போய்விட்டாரே’ என்கின்றனர் கட்சியினர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவர் திடீரென ரொம்ப ஹேப்பியாக இருக்காராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை சின்னத்திற்கு எதிராக பழாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைஞ்ச தேனிக்காரரின் எம்எல்ஏ பதவியும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்காம்.. மிலானி என்ற தேனிக்காரர் தான் சபாநாயகரிடம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பதவியில் இருப்பதாக கூறி அடுக்கடுக்கான ஆதாரங்களை கொடுத்திருக்காராம்.. எம்எல்ஏ இல்லாத ஒருவர் இவ்வாறு மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கலாமா அல்லது இலை கட்சியோ ஏதாவது ஒரு எம்எல்ஏவோ மனு கொடுத்தால்தான் பதவியை பறிக்க முடியுமா என்ற கேள்விகள் எல்லாம் எழுந்திருக்காம்.. அதே நேரத்தில் தவறு என தெரிந்தவர்களில் யார் கொடுத்தாலும் அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருக்காம்.. குறிப்பாக இலைக்கட்சி தலைவரின் ஆட்சியின்போது அவருக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் கவர்னரிடம் மனுதான் கொடுத்தாங்களாம்.. அதற்காக அவர்களின் பதவியை பறித்ததோடு எந்தவித ஈவு இரக்கமும் இல்லாமல் தூக்கி எறிஞ்சிட்டாங்களாம் இலைக்கட்சி தலைவர்.. அதற்கான விளக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு பஞ்சாப், அரியானா நீதிமன்ற முழுஅமர்வில் ஒடிசாவின் பிரகாஷ்சிங் பாதல் வழக்கு தீர்ப்பையும் மேற்கோள் காட்டியிருக்காங்களாம்.. அந்த தீர்ப்பில் எல்எல்ஏ மட்டுமல்லாமல், குடிமகனாக விருப்பமுள்ள எவரும் சபாநாயகருக்கு மனுவை அனுப்பலாம் என்ற தீர்ப்பையும் சொல்லியிருக்காங்களாம்..
இதனால தேனிக்காரர் பதவி பறிபோவதில் எந்த பிரச்னையும் இருக்காதுன்னு சட்டநிபுணர்கள் சொல்றாங்க.. அதே நேரத்துல இலைக்கட்சி தலைவர் ரொம்பவே ஹேப்பியா இருக்காராம்.. தேனிக்காரர் தொடர்ந்த வழக்குக்கு இந்த தீர்ப்பே போதுமானதாக இருக்கும் என அவர் தனது அடிபொடிகளிடம் சொல்லி ஆனந்தப்படுறாராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
‘‘தொகுதியை கைப்பற்ற போட்டிப்போடும் மலராத கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கையோடு வரும்படி தலைமை புதுவிதமான உத்தரவு போட்ட கிடுக்கிப்பிடி பற்றி தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் உள்ள திரு என துவங்கும் தொகுதியில் இலைக்கட்சி கூட்டணி சார்பில் மலராத கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளதாம்.. இதை கருத்தில் கொண்டு அந்தப் பகுதியில் மலராத கட்சியில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனராம்.. அந்த வகையில் ‘திரு’ தொகுதியின் மேற்கு ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றுவதில் நாட்டாமை கட்சியில் இருந்து வந்த ஒருவரும், வழக்கறிஞர் ஒருவரும் தீவிரம் காட்டி வருகிறார்களாம்.. இருவர் மீதும் கட்சியினர் மத்தியில் போதிய ஆதரவு இல்லாத நிலையில் இருவரும் தீவிரம் காட்டுவதால் கட்சித் தலைமையே வேறுவிதமான முடிவை எடுத்துள்ளதாம்.. குறிப்பிட்ட அந்த ஒன்றியத்திலுள்ள ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது நூறு பேரை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென டார்கெட் கொடுத்துள்ளார்களாம்.. இதற்கான முறையான பட்டியலை தலைமைக்கு யார் தருகிறார்களோ, அவர்களுக்கே கட்சி பொறுப்பு என கூறியுள்ளனராம்.. மாவட்டத்தில் மொத்தமே சில நூறு பேர் தான் கட்சியில் உறுப்பினர்களாக இருக்காங்களாம்.. ஆனால் கிராம பகுதியை கொண்ட ஏரியாவில் வார்டுக்கு நூறு பேரை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்.. இரண்டு பேருக்கும் பதவி கிடைக்காது, வேறு யாருக்கோ பதவியை கொடுப்பதற்காக கட்சி தலைமை இப்படியொரு புதுவிதமான நிபந்தனையை விதித்துள்ளது என இருவரின் காதில் படும்படி சொந்த கட்சியினரே பேசி வருகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post தேனிக்காரர் நிலை இறுகி வருவதை பார்த்து இலைத்தலைவர் ஹேப்பி ஆக இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article