குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகள், நகராட்சிகளுக்காக சாலையோர பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்படும் திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இதற்கிடையே நீலகிரியில், ‘குப்பை தொட்டி இல்லா ஊட்டி’ என்ற திட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்ததால், கிராம ஊராட்சிகளுக்கு குப்பை தொட்டிகளை வழங்கி விட்டு, ஊட்டி நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட குப்பை தொட்டிகளை வீணாக்காமல் இருப்பதற்காக ஊட்டி – குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரம் 1 கிலோ மீட்டருக்கு ஒரு குப்பை தொட்டி வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி, குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை சாலையின் இரு புறமும் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு, அதில் சுற்றுலா பயணிகள் பொது மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனிடையே தற்போது நல்ல நிலையில் உள்ள குப்பை தொட்டிகள் கவிழ்த்து வைக்கப்பட்டு இருப்பதால், சுற்றுலா வரும் பயணிகள் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை வனப்பகுதிகளிலும், சாலையோரங்களும் வீசப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனர்.
அதே சமயத்தில் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்வதால் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை வீசிச்செல்லும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து, இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
The post குன்னூர் மலைப்பாதையில் கவிழ்த்து வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் appeared first on Dinakaran.