*சமவெளி பகுதி மொத்த வியாபாரிகள் வாங்கி செல்ல நடவடிக்கை
*அதிகாரிகள் தகவல்
ஊட்டி : நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் சந்தை தற்காலிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சமவெளி பகுதி மொத்த வியாபாரிகள், விவசாயிகள் காய்கறிகள் வாங்கிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் போன்ற இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் மலை காய்கறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின் தற்போதும் தேயிலைக்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாகவும், பொருளதாரத்தை நிர்ணயிக்க கூடிய ஒரு அங்கமாகவும் காய்கறி விவசாயம் விளங்கி வருகிறது. மலை காய்கறிகள் சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
நீலகிரியில் விளைவிக்கப்படும் கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு மேட்டுபாளையம் பகுதியில் உள்ள மண்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஏலம் விடப்பட்டு தமிழகத்தின் சென்னை, கோவை, திருநெல்வேலி என மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுதவிர அண்டை மாநிலமான கேரளாவிற்கும், கர்நாடகாவின் பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. நீலகிரியில் இருந்து காய்கறிகளை அறுவடை செய்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மேட்டுபாளையத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. லாரி வாடகை விவசாயிகளே தர வேண்டியுள்ளது.
மேலும் அவ்வாறு கொண்டு செல்லப்படும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காத பட்சத்தில் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மற்ற ஊர்களில் இருந்து விவசாயிகள் நீலகிரிக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்ல வசதியாக சந்தை (மண்டி) அமைக்க வேண்டும் என பல்வேறு விவசாயிகளும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை வேளாண் வணிகத்துறை மூலம் அரசுக்கு அறிக்கையும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே எடப்பள்ளி பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. எடப்பள்ளி பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் அந்த இடம் வேளாண் வணிகத்துறைக்கு பரிமாற்றம் செய்யப்பட்டன. தொடர்ந்து சந்தை அமைக்கும் பணிகள் துவங்கியது. காய்கறிகளை பாதுகாப்பாக வைக்க குடோன், குளிர்பதன கிடங்கு, லாரிகள் நிறுத்துவதற்கு உண்டான வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வேளாண் சந்தை தற்காலிக ஒழுங்குமுறை விற்பனை கூடமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் ஊட்டியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சந்தை திறப்பு சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது, காய்கறிகளை வாங்கி விற்பனை செய்யும் பெரும்பாலான மொத்த காய்கறி வியாபாரிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ளனர். அவர்களை இங்கு வரவழைத்து காய்கறிகளை வாங்கி செல்ல வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சமவெளி பகுதி விவசாயிகளை இங்கு வரவழைப்பது பெரும் சவாலாக உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: குன்னூர் அருகே எடப்பள்ளியில் உள்ள ஒருங்கிணைந்த கிராமப்புற வணிக வளாகத்தில் உள்ள 500 மெட்ரிக் டன் கிடங்கில் தற்காலிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுவதற்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுவதற்கான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கருவிகள், தளவாடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான மொத்த வியாபாரிகள் கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் இருப்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை செயல்பாட்டில் கொண்டு வருவதற்காக கடந்த 19ம் தேதி ஊட்டியில் விவசாயிகள் மற்றும் மேட்டுப்பாளையம், ஊட்டி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post குன்னூர் எடப்பள்ளி பகுதியில் வேளாண் சந்தை தற்காலிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடமாக செயல்பட அனுமதி appeared first on Dinakaran.