போளூர், பிப்.13: ஜவ்வாதுமலையில் குடும்ப தகராறில் விவசாயியை அடித்துக்கொன்ற மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை தாலுகா, ஜமுனாமரத்தூர் அருகே உள்ள புதுரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(40), விவசாயி. இவரது மனைவி லதா(38). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். சங்கர் குடிபோதைக்கு அடிமையாகி, எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி லதா கோபித்து கொண்டு கல்யாணமந்தையில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வதும், மீண்டும் வருவதுமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை குடிபோதையில் இருந்த சங்கர் தனது மனைவி லதா மற்றும் குழந்தைகளை காலால் எட்டி உதைத்தாராம். இதனை லதா தடுத்தும் கேட்கவில்லையாம். இதனால் வேதனையடைந்த அவர் கல்யாணமந்தையில் உள்ள தனது தம்பிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், லதாவின் தம்பிகள் பிரபு(32), செந்தில்(28) மற்றும் அதே ஊரை சேர்ந்த உறவினர் ஆனந்தன்(24) ஆகியோர் அவரத வீட்டிற்கு சென்று சங்கரிடம் நியாயம் கேட்டுள்ளனர். அப்போது சங்கர், அவர்களை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த லதா உட்பட 4 பேரும் விறகாலும், கற்களாலும் சங்கரை சரமாரியாக தாக்கினார்களாம். இதில், படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சங்கரின் தம்பி ஏழுமலை என்பவர் ஜமுனாமரத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போளூர் டிஎஸ்பி மனோகரன், ஜமுனாமரத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து லதா, அவரது தம்பிகள் பிரபு, செந்தில் மற்றும் உறவினர் ஆனந்தன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை போளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் நேற்று அடைத்தனர். குடும்ப தகராறில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post குடும்ப தகராறில் விவசாயி சரமாரி அடித்துக்கொலை மனைவி உட்பட 4 பேர் கைது ஜவ்வாதுமலையில் பரபரப்பு appeared first on Dinakaran.