குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு சவால் விடுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

3 hours ago 2
  • சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதின் வழியாக, ஆளுநர்களின் முட்டுக்கட்டையை பா.ஜ. சட்டபூர்வமாக்க முயல்கிறதா?
  • பா.ஜ. அல்லாத கட்சிகள் ஆளும் மாநில சட்டமன்றங்களை ஒன்றிய அரசு முடக்க எண்ணுகிறதா?

சென்னை: அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இவற்றில் பல்கலைக்கழக சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், மசோதாக்களின் மீது ஆளுநர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

இதையடுத்து, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரண்டு மனுக்களை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டமன்ற மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது. மேலும் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரம் 146ன் கீழ் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மாநில அரசுகள் வரவேற்றன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேள்விகளை எழுப்பினார். அதாவது, தமிழ்நாடு அரசின் வழக்கின் தீர்ப்பு குறித்து மொத்தம் 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, இதற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்திடம் கேட்டுள்ளார். அதில், அரசியல் சாசனத்திலேயே இல்லாத நிலையில் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு எப்படி காலக்கெடு நிர்ணயிக்க முடியும்?, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் 146யை மாநில அரசுகள், ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசுக்கு பயன்படுத்த முயற்சிக்காதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியலமைப்பு நிலைப்பாட்டை சீர்குலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் மூலமாக, தமிழ்நாடு ஆளுநர் பா.ஜ.வின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சிறுமைப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஒன்றிய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை. மேலும், இது சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பொருள்கொள்வதில் இறுதித் தீர்ப்பளிக்கும் உரிமைகொண்ட உச்சநீதிமன்றத்துக்கும் நேரடியாகச் சவால் விடுகிறது.

ஆளுநர்கள் முடிவெடுக்கக் காலநிர்ணயம் செய்யப்படுவதில் எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்?, சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதின் வழியாக, ஆளுநர்களின் முட்டுக்கட்டையை பா.ஜ. சட்டபூர்வமாக்க முயல்கிறதா?, பா.ஜ. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டமன்றங்களை ஒன்றிய அரசு முடக்க எண்ணுகிறதா?

மிக முக்கியமான கட்டத்தில் நமது நாடு நிற்கிறது. உச்சநீதிமன்றத்தின் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டமன்றங்களைத் திறனற்றதாக்கவும் நினைக்கும் ஒன்றிய பா.ஜ. அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால், மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பா.ஜ. அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன். நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைத்து இப்போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு பதிவில் முதல்வர் கூறியுள்ளார்.

The post குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு சவால் விடுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article