நியு சண்டிகர்: ஐபிஎல் 18வது தொடரின் முதல் எலிமினேட்டர் போட்டி நியூ சண்டீகர் நகரில் நேற்று நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். இவர்களின் அதிரடியால் பவர்பிளே முடிவில், மும்பை விக்கெட் இழப்பின்றி 79 ரன் குவித்தது.
இந்நிலையில், சாய் கிஷோர் வீசிய 8வது ஓவரில் கோட்ஸீயிடம் கேட்ச் தந்து, பேர்ஸ்டோ (47 ரன்) ஆட்டமிழந்தார். பின், ரோகித்துடன், சூர்யகுமார் யாதவ் இணை சேர்ந்தார். 9வது ஓவர் முடிவில், மும்பை அணி 100 ரன்னை கடந்தது. 13வது ஓவரின் முடிவில் சூர்யகுமார் யாதவ் (33 ரன்) அவுட்டானார். அதனால், திலக் வர்மா களமிறங்கினார். அதன் பின், சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா (50 பந்து, 4 சிக்சர், 9 பவுண்டரி, 81 ரன்), 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் திலக் வர்மா (25 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின், கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் இணை சேர்ந்த நமன் திர் (9 ரன்), 19வது ஓவரில் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் மும்பை, 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது. 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக சாய் சுதர்சன் கேப்டன் சுப்மன் கில் ஆடினர். கில் 1 ரன்னிலும் பின் வந்த குசால் மெண்டிஸ் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர், 48 ரன் எடுத்து அவுட் ஆனார். பின், ரூதர்போர்ட் வந்தார். சிறிது நேரத்தில் சுதர்சன் 80 ரன்னில் ஆட்டம் இழந்ததால் தெவாதியா உள் வந்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் மட்டுமே எடுத்ததால் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்று குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது.
The post குஜராத்துக்கு எதிராக மும்பை அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.