டாங்,
மராட்டிய மாநிலம் திரிம்பகேஷ்வரில் இருந்து 48 யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள துவாரகாவுக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் குஜராத் மாநில சபுதாரா மலைவாஸ்தலத்திற்கு அருகே பஸ் சென்றுகொண்டிந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.