
ஆமதாபாத்,
குஜராத்தில் உள்ள விசாவதர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பயானி, ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.க.வில் இணைந்ததும் இந்த தொகுதி காலியானது. இதேபோன்று, காதி தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. கர்சன் சொலான்கி பிப்ரவரி 4-ந்தேதி மரணம் அடைந்ததும் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கான போட்டியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் குஜராத் தலைவர் சக்திசின்ஹ் கோஹில் கூறும்போது, குஜராத்திகள் 3-வது அணிக்கு ஒருபோதும் வாக்களித்தது இல்லை.
காங்கிரஸ் அல்லது பா.ஜ.க.வுக்கே வாக்களிப்பார்கள் என்றார். ஆம் ஆத்மி கடந்த தேர்தலில் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டும் 11 சதவீதம் அளவுக்கே வாக்குகளை பெற்றன.
பா.ஜ.க.வை தோற்கடிக்க முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சியே உள்ளது. அதனால், இரு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டும் என கூறியுள்ளார்.
ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என அவர் கூறியபோதும், தேசிய அளவில் நாங்கள் அனைவரும் இந்தியா கூட்டணியில் உள்ளோம் என கோஹில் கூறியுள்ளார்.