
கொழும்பு,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து இலங்கையின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா களம் இறங்கினர். இதில் நிசாங்கா 6 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து குசல் மெண்டிஸ் களம் புகுந்தார். குசல் மெண்டிஸ் - மதுஷ்கா இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் அரைசதம் அடித்த நிலையில் மதுஷ்கா 51 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த காமிந்து மெண்டிஸ் 4 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து குசல் மெண்டிஸ் உடன் கேப்டன் அசலங்கா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். நிலைத்து நின்று ஆடிய குசல் மெண்டிஸ் சதம் அடித்து அசத்தினார்.
அவர் சதம் அடித்த நிலையில் 101 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் அசலங்கா அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 281 ரன்கள் குவித்து அசத்தியது. இலங்கை தரப்பில் அசலங்கா 78 ரன்னுடனும், ஜனித் லியனகே 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷியஸ், ஆரோன் ஹார்டி, சீன் அப்போட், ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 282 ரன் எடுத்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆட உள்ளது.