கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

4 months ago 24

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட 27 சதவீதம் அதிகம் பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நெல்லை மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை, பாபநாசம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பரமக்குடி ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (சனிக்கிழமை) கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்கள், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 22-ந்தேதி முதல் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே 22-ந்தேதிக்கு பின்னர் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read Entire Article