திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடங்கள், அதில் கண்டெடுக்கப்பட்ட கட்டுமானங்கள் ரூ.15 கோடியே 69 லட்சம் செலவில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைய உள்ளது. கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நவீன தொழில்நுட்பங்களை அறியும் வகையில், தமிழக தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் ஆகியோர் இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள கொலோசியம், போரரோமான், பாம்பீ ஆகிய நகரங்களில் முக்கிய தொல்லியல் களங்கள் உள்ளன. யுனேஸ்கோ உலக பாரம்பரிய தளமாக ரோமுடன் சேர்ந்து அருங்காட்சியகமாக மாற்றியுள்ளது. இதில் முக்கியமான திறந்தவெளி அருங்காட்சியகம் பாம்பீ, கொலோசியம் ஆகும். எனவே இவை இரண்டையும் நேரில் கண்டு, அதன்படி கீழடியிலும் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க உள்ளனர்.
இத்தாலியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைந்த தொழில்நுட்பம், பராமரிப்பு, பார்வையாளர்கள் அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள ஒரு மாத பயணமாக சென்றுள்ளனர். ஏற்கனவே ஸ்பெயின் நாட்டிற்கு கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய்குமார் ஆகியோர் கடந்தாண்டு அக்டோபரில் 15 நாள் பயிற்சிக்கு சென்றனர். தமிழகத்தில் முதல் திறந்தவெளி அருங்காட்சியகம் கீழடியில் அமைவது குறிப்பிடத்தக்கது.
The post கீழடியில் நவீன தொழில்நுட்பங்களுடன் அருங்காட்சியகம் தமிழக தொல்லியல் ஆணையர் இத்தாலியில் ஒரு மாதம் ஆய்வு appeared first on Dinakaran.