கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் நடனமாடிய பாதிரியார் மாரடைப்பால் உயிரிழப்பு: கடைசி நிமிட வீடியோ வைரல்

2 months ago 10

குன்னூர்: டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடு, வீடாக கேரல்ஸ் நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்தவர்கள் கேரல்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். தர்மபுரி – பென்னாகரம் ரோட்டில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தில் பிரான்சிஸ் (58) என்பவர் கடந்த 5 ஆண்டாக பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆலயத்தில் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்காக பிரான்சிஸ் வந்தார். மதியம் சுமார் 2 மணியளவில் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி ஆலயத்தில் ஓய்வு எடுத்துவிட்டு, மாலை 6 மணிக்கு கிறிஸ்தவ கேரல்ஸ் பூபாளம் நிகழ்ச்சியை ஒசட்டி பகுதியில் உள்ள கிறிஸ்தவ வீடுகளில் நடத்தி கொண்டிருந்தார். இரவில் ஒசட்டியில் உள்ள பவுல்ராஜ் என்பவரது வீட்டில் பூபாளம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பிரான்சிஸ், மூதாட்டி ஒருவருடன் உற்சாகமாக நடனமாடினர்.

ஆடிக்கொண்டிருந்தபோதே திடீரென பிரான்சிஸ் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் மாரடைப்பில் இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் உடல் தர்மபுரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பாதிரியாரின் கடைசி நிமிட நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் நடனமாடிய பாதிரியார் மாரடைப்பால் உயிரிழப்பு: கடைசி நிமிட வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article