
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50,000 ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாம்பழம் கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அதிமுக சார்பில் மா விவசாயிகளுக்கு ஆதராவகவும், திமுக அரசை கண்டித்தும் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதன்படி இன்று காலை சரியாக 9 மணிக்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் மா கொள்முதல் விலை கிலோவுக்கு 13ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மாங்கூழுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.