
சென்னை,
தமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கடந்த ஏப்ரல் மாதம் நடுக்காவேரியில் விஷசாராயம் விற்பவர்களை தட்டிக்கேட்ட இளைஞர் தினேஷ் மீது போலீசார் போலி வழக்கு பதிந்து செய்து கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரி அவரது 2 சகோதரிகளும் போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். அப்போது. தரக்குறைவாக பேசியதோடு தாமதமாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதால் தினேஷின் இளைய சகோதரி கீர்த்திகாவின் உயிர் பறிபோனது.
மறைந்த கீர்த்திகாவின் இறப்பிற்கான நியாயத்தை பெற்றுத் தரும் வகையில், தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையம் தானாக விசாரிக்க முன்வந்த நிலையில், அப்போது கூட பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தி.மு.க. அரசு நிற்கவில்லை. தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் டெல்லி அலுவலகத்தில் மே 22-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு கடந்த 17-ந்தேதி மாவட்ட கலெக்டரால் பெறப்பட்ட கடிதம், மிகத்தாமதமாக மே 20-ந்தேதி இரவில்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அந்த குடும்பத்தினர் ஒரே நாளில் எப்படி டெல்லிக்கு செல்வது என்று தெரியாமல் தவித்தபோது, தமிழக பா.ஜனதா தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்த் அய்யாசாமி தனது சொந்த செலவில் அவர்களை விமானத்தில் அனுப்பி வைத்து, குறிப்பிட்ட தேதியிலேயே அவர்களை ஆணையத்தின் முன் ஆஜராக வழிவகை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தக்க நீதி கிடைக்கும் என நம்புவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.