காவல் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் ஒடுகத்தூர் அருகே பரபரப்பு நிலத்தகராறில் தாக்கியவர்களை கைது செய்ய கோரி

2 days ago 6

ஒடுகத்தூர், ஜூன் 6: ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பு-வள்ளியம்மா தம்பதியினர். இவர்களுக்கு 6 ஆண் மற்றும் 6 பெண் என மொத்தம் 12 பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் மகனான தசரதன் மற்றும் மகளான வாணி என்பவரும் அருகருகே வசித்து வருகின்றனர். மேலும், வாணிக்கு அதே பகுதியில் சொந்தமாக இடம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை தசரதன் தன்னுடைய பெயருக்கு மாற்றி எழுதி வைக்கும் படி தனது தங்கையிடம் அவ்வப்போது பிரச்னை செய்து வந்துள்ளார். இதனால், நாள்தோறும் அண்ணன், தங்கை இருவரும் இடத்துக்காக சண்டையிட்டு வந்துள்ளனர். மேலும், தசரதன் குடித்து விட்டு தனது தங்கையான வாணியை ஆபாசமாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக வாணி ஏற்கனவே வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால், வேப்பங்குப்பம் போலீசாரும் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இருப்பினும் நேற்று மீண்டும் தசரதன் தனது தங்கை வாணியை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வாணி மீண்டும் போலீசாரிடம் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். ஆனால், போலீசார் அதனை கண்டு கொள்ளாததால் வாணி அவரது மகள், மகன் மற்றும் தங்கை ஆகியோர் ஒடுகத்தூர்-வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். மேலும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்ற வாணி தரப்பினர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post காவல் நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்கள் ஒடுகத்தூர் அருகே பரபரப்பு நிலத்தகராறில் தாக்கியவர்களை கைது செய்ய கோரி appeared first on Dinakaran.

Read Entire Article