
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து விஜய் அறிவுறுத்தலின்பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் த.வெ.க. தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, அஜீத்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், ஐகோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஜூலை 3-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கிடைக்காததால், ஜூலை 6-ந்தேதி(நாளை) போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் அதற்கும் அனுமதி கிடைக்காததால் த.வெ.க. போராட்டம் மீண்டும் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை 12-த்தேதி போராட்டத்தை நடத்த த.வெ.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.