
புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என அந்த நாட்டு மந்திரிகளே அலறி வருகின்றனர்.
இதனிடையே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூட இந்தியா முடிவு செய்தது. அதேநேரம் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்ட மத்திய அரசு, இதற்காக பல்வேறு காலக்கெடுவையும் அறிவித்தது.
அதன்படி இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் பஞ்சாப்பின் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறினர். அதைப்போல பாகிஸ்தானில் தங்கியிருந்த இந்தியர்களும் இந்த எல்லை வழியாக நாடு திரும்பினர்.
மத்திய அரசின் காலக்கெடு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது அட்டாரி-வாகா எல்லை முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதைப்போல பாகிஸ்தானும் தனது எல்லையை மூடிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டிற்குச் செல்ல இந்தியா அனுமதி அளித்தும், எல்லை மூடப்பட்டதால் தாய்நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த 6 நாட்களில், இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்களும், பாகிஸ்தானில் இருந்து 1,465 இந்தியர்களும் வாகா எல்லையைக் கடந்து தங்களது நாடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும், ஒரு சிலர் இன்னும் எல்லையில் சிக்கித் தவிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.