
புதுச்சேரி,
காரைக்காலில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் இளைஞர் ஒருவர் பைக்கில் வந்துள்ளார். அவரை மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா தடுத்து நிறுத்தியும், விசாரணைக்கு பயந்து அவர் நிற்காமல் சென்று விட்டார். பின்னர் அந்த இளைஞரை போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.
அதோடு, அந்த இளைஞருக்கு நூதன தண்டனை வழங்க போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து போலீசார் கூறியபடி அந்த இளைஞர் காரைக்காலில் உள்ள காத்தாபிள்ளை சிக்னலில், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பதாகை ஏந்தியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போலீசார் வழங்கிய இந்த நூதன தண்டனை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.