கோவில்பட்டி, ஜூன் 25: கோவில்பட்டியில் காரில் ஆயுதங்களுடன் சுற்றிய வாலிபரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எஸ்ஐ ராமச்சந்திரன் தலைமையில் போலீசார், கோவில்பட்டி கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் சென்றதால், விரட்டிச் சென்ற போலீசார் காரை மறித்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது காரில் அரிவாள், இரும்பு கம்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரை ஓட்டிவந்த இலுப்பையூரணி, பூரணம்மாள் காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் சின்னத்துரை(33) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் ஓட்டி வந்த கார், கோவில்பட்டி மேற்கு போலீசில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாணிக்கராஜா என்பவருக்கு சொந்தமானது என்பதும், கருப்பசாமி மீது கொலை, அரிசி கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்து சின்னத்துரையை கைது செய்து, கார் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
The post காரில் ஆயுதங்களுடன் சுற்றிய வாலிபர் கைது appeared first on Dinakaran.