புதுடெல்லி: சர்வதேச விண்வௌி மையத்தில் உள்ள இந்திய விண்வௌி வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அமெரிக்காவின் விண்வௌி ஆய்வு மையமான நாசா விண்வௌி துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக ஆக்சியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் ஆக்சியம்-4 விண்வௌி திட்டத்தின் மூலம் மனிதர்களை சர்வதேச விண்வௌி நிலையத்துக்கு அனுப்பி வைக்க நாசா உதவுகிறது. இந்தியாவின் விண்வௌி ஆய்வு மையமான இஸ்ரோவும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளது.
அந்த வகையில் ஆக்சியம்-4 விண்வௌி திட்டத்தில் இந்திய விண்வௌி வீரர் சுபான்சு சுக்லாவும் இடம்பெற்றுள்ளார். சுபான்சு சுக்லா உள்ளிட்ட 4 பேரை உள்ளடக்கிய டிராகன் விண்கலம் கடந்த 25ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கென்னடி விண்வௌி தளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த டிராகன் விண்கலம் பூமியை சுற்றி வந்து 28 மணி நேர பயணத்துக்கு பிறகு கடந்த 26ம் தேதி மாலை சர்வதேச விண்வௌி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.
இதன் மூலம் சுபான்சு சுக்லா சர்வதேச விண்வௌி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்தியர் ஆவார். இந்நிலையில் சர்வதேச விண்வௌி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்சு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி,’இன்று, நீங்கள் எங்கள் தாய்நாட்டிலிருந்து தொலைவில் இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமானவர்’ என்றார்.
அதற்கு சுபான்சு சுக்லா,’ இது எனது பயணம் மட்டுமல்ல, நமது நாட்டின் பயணமும் கூட’ என்றார். அப்போது அவரிடம்,’ இதுவரை என்ன பார்த்தீர்கள்’ என்று பிரதமர் மோடி கேட்டார். அதற்கு சுபான்சு சுக்லா,’ சிறிது நேரத்திற்கு முன்பு, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, நாங்கள் ஹவாய் மீது பறந்து கொண்டிருந்தோம். சுற்றுப்பாதையில் இருந்து ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் 16 சூரிய அஸ்தமனத்தையும் காண்கிறோம். நமது நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது.
இங்கே எல்லாம் வித்தியாசமானது.நாங்கள் ஒரு வருடம் பயிற்சி பெற்றோம், வெவ்வேறு அமைப்புகளைப் பற்றி கற்றுக்கொண்டேன். ஆனால் இங்கு வந்த பிறகு, எல்லாம் மாறிவிட்டது. விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் சிறிய விஷயங்கள் கூட வேறுபட்டவை… இங்கே தூங்குவது ஒரு பெரிய சவால்… இந்த சூழலுக்குப் பழக சிறிது நேரம் ஆகும்’ என்றார். அவரிடம் உங்கள் எல்லை என்ன என்று பிரதமர் கேட்டார். அதற்கு சுபான்சு சுக்லா கூறுகையில்,’ எந்த எல்லையும் தெரியவில்லை.
இந்தியா மிகவும் பிரமாண்டமாகவும், மிகப் பெரியதாகவும்தெரிகிறது. முதல் பார்வை பூமியைப் பற்றியது, பூமியை வெளியில் இருந்து பார்த்த பிறகு, முதல் எண்ணமும் நினைவுக்கு வந்த முதல் விஷயமும் பூமி முற்றிலும் ஒன்றாகத் தெரிகிறது, எந்த எல்லையும் வெளியில் இருந்து தெரியவில்லை என்பதுதான். இந்தியாவை முதன்முறையாகப் பார்த்தபோது, இந்தியா உண்மையில் மிகவும் பிரமாண்டமாகத் தெரிகிறது, மிகப் பெரியதாகத் தெரிகிறது, வரைபடத்தில் நாம் பார்ப்பதை விட மிகப் பெரியது…
பூமியை வெளியில் இருந்து பார்க்கும்போது, எந்த எல்லையும் இல்லை, எந்த மாநிலமும் இல்லை, எந்த நாடுகளும் இல்லை என்று தெரிகிறது. நாம் அனைவரும் மனிதகுலத்தின் ஒரு பகுதி, பூமி நமது ஒரே வீடு, நாம் அனைவரும் அதில் இருக்கிறோம்.உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுடன், நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துவிட்டேன். இங்கே நிற்பது எளிதாகத் தெரிகிறது, ஆனால் என் தலை கொஞ்சம் கனமாக இருக்கிறது, சில சிரமங்களை எதிர்கொள்கிறது. ஆனால் இவை சிறிய பிரச்சினைகள். நான் 634 விண்வெளி வீரர். இங்கு இருப்பது ஒரு பாக்கியம்’ என்றார்.
The post இந்திய விண்வௌி வீரர் சுபான்சுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் appeared first on Dinakaran.