
சென்னை,
காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"உலகை அழிக்கும் ஆயுதம் ஆயிரம் உண்டு; ஆனால்
உலகை உருவாக்கும் பேராயுதம் காதல் மட்டும்தான்!
தன்னைப்போல் பிறரையும் நேசி
என்றார் இறைமகன் ஏசு!
அண்டை அயலானுக்கும் அன்புசெய் என்றார்
இறை தூதர் நபிகள் நாயகம்!
அன்பே சிவம் என்றார் திருமூலர்!
எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றது!
எல்லா மனிதர்களையும் அன்புதான் பாதிக்கின்றது!
கடவுளை மறுக்கும் மனிதர்கள் கூட காதலை மறுப்பதில்லை!
என்னால் எல்லாவற்றையும் கொடுக்க முடியாது;
அன்பால் எல்லாவற்றையும் கொடுக்க முடியும்!
காதலில் ஒன்றுமில்லை;
ஆனால் காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமில்லை;
காதலுக்காக யாரும் சாகக் கூடாது;
ஆனால் காதலிக்காமலும் யாரும்
சாகக் கூடாது!
"ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே!
அதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்.
காதலினால் சாகாமலிருத்தல் கூடும் கவலைபோம்
அதனாலே மரணம் பொய்யாம். - பெரும்பாவலர் பாரதி"
"நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனமழிந்து போகும்
ஆதலால், மானுடனே
தாய்நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்! - புதுவை ரத்தினதுரை"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.