அண்ணாநகர்: காதலிப்பதாக வாலிபர் ஏமாற்றி பணம் பறித்துவந்ததால் விரக்தியடைந்த ஐடி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவர் தனது பிறந்தநாளில் இந்த முடிவை எடுத்துள்ளதால் இறந்தநாளாக மாறிவிட்டது. சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் ஆறுமுகம் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் தினேஷ்(27) சினிமாவில் உதவியாளராக பணியாற்றுகிறார். இவர்களது மகள் தீபிகா(23). இவர் அம்பத்தூர் பகுதியில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்துவந்தார். வீட்டின் கீழ்தளத்தில் வசித்துவந்த தீபிகா நேற்று நீண்டநேரமாக வெளியே வராததால் தாய் சென்று அறை கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது படுக்கை அறையில் தீபிகா தூக்கிட்டு கிடப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சென்று தீபிகாவை மீட்டு உடனடியாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரது உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், தீபிகா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதனால் தாய் கதறி அழுதார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதுசம்பந்தமாக தீபிகாவின் தாயிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது; எனது மகள் சாவுக்கு என் வீட்டிற்கு குடியிருந்த அருள் என்பவர்தான் காரணம். அவர்தான் எனது மகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றினார். கடந்தாண்டு பணம், நகையை ஏமாற்றியதுடன் எனது மகளை சரமாரியாக அடித்துள்ளார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது அருளை அழைத்து எச்சரித்தனர்.
இதன்பிறகும் எனது மகளை காதலிப்பதாக கூறிவந்தார். எனது மகள் சாவுக்கு காரணமான அருள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தாண்டு எனது மகளின் பிறந்தநாளுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்து வந்தேன். தற்போது அந்த கனவு சரிந்துவிட்டது. இன்று எனது மகளின் பிறந்தநாள் இறந்தநாளாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதன் அடிப்படையில், விசாரணை நடத்துவதற்காக அருள் வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post காதலிப்பதாக ஏமாற்றி பணம் பறித்த வாலிபரால் ஐடி பெண் தூக்கிட்டு தற்கொலை: பிறந்தநாள் இறந்த நாளாக மாறியது appeared first on Dinakaran.