காணும் பொங்கல் சிறப்பு வழிபாடு

4 months ago 15

பெரணமல்லூர், ஜன.17: பெரணமல்லூர் பகுதியில் உள்ள கோயில்களில் நேற்று காணும் பொங்கல் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள், தேவி, பூதேவி சமேத லட்சுமிநரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சிம்மமலையில் உள்ள சீனுவாச பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.

அதேபோல் இஞ்சிமேடு திருமணிசேறையுடையார் சிவனாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் முனுகப்பட்டு பகுதியில் அமைந்த பச்சையம்மன் கோயிலில் காணும் பொங்கல் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். குறிப்பாக பெரணமல்லூர் பகுதியில் காணும் பொங்கல் முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

ஆரணி: ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் காணும் பொங்கலையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதையொட்டி காலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், ஆரணி சுற்றுவட்டார கிராமங்களில் காணும் பொங்கலையொட்டி கிராம தேவதை, குலதெய்வ கோயில்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர்.

The post காணும் பொங்கல் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Read Entire Article