காட்டேரி நீர்வீழ்ச்சி வறண்டது

2 months ago 6

*சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி : காட்டேரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கிய இரு மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும்.

அதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கிய இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும்.அச்சமயங்களில் அனைத்து நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதனை நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

குறிப்பாக, கேத்தி பாலாடா வழியாக குன்னூர் செல்லும் சுற்றுலா பயணிகள் காட்டேரி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்வது மற்றும் புகைப்படமும் எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்தது. இதனால், கடந்த மாதம் வரை காட்டேரி அணையில் தண்ணீர் அதிகமாக காணப்பட்டது.

நீர் வீழ்ச்சியிலும் தண்ணீர் கொட்டியது. இதனை இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.ஆனால், கடந்த மூன்று மாதமாக மழை பெய்யாத நிலையில், நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்தே காணப்படுகிறது.

குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள காட்டேரி அணையிலும் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீர் அளவும் குறைந்துள்ளது.இதனால், அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படாத நிலையில், காட்டேரி நீர்வீழ்ச்சியிலும் தற்போது தண்ணீர் குறைந்து வறண்டு காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

The post காட்டேரி நீர்வீழ்ச்சி வறண்டது appeared first on Dinakaran.

Read Entire Article