காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியில் உள்ள செல்வவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், 44வது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதோபோல், காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் ஸ்ரீசக்தி விநாயகர் மற்றும் வையாபுரீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமோத ஸ்ரீனிவாச பெருமாள் பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் மாக கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த வயலக்காவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீதுலுக்கானத்தம்மன் மற்றும் ஸ்ரீகெங்கையம்மன் ஆலயங்களிலும், இருமரம் கிராமத்தில் ஸ்ரீசாமழகியம்மன் ஆலயத்திலும் மற்றும் கிளக்காடி கிராமத்தில் துலுக்கானத்தம்மன் ஆலயங்களிலும் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
படப்பை அடுத்த கீழ்படப்பை வீரட்டீஸ்வரர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. திருப்போரூர் கச்சேரி சந்து தெருவில் பாதாள மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு பாலாலயம் நடந்தது. இதையடுத்து, திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று அம்மன் சன்னதி, முன் மண்டபம், விமானம் ஆகிய திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் புனரமைக்கப்பட்டு அதன் மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் மேளதாளங்கள் முழுங்க வாணவேடிக்கைகளுடன் ஆங்காங்கே உள்ள கோயில்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பித்தபின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடைப்பெற்றது.
விழாவையொட்டி, அனைத்து கோயில் வளாகங்களில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் கோயில்களில் கும்பாபிஷேகம் விமரிசை appeared first on Dinakaran.