
ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாகவும், பணய கைதிகளை மீட்கும் நோக்கிலும் காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்தி வரும் தாக்குதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இதற்கு முன் நடத்தப்பட்ட தாக்குதலில், 10 பேர் கொல்லப்பட்டு ஒரு மணிநேரத்திற்குள் நடந்த இந்த தாக்குதலில் உயிரிழந்த அனைவரும் ஒரே குடும்பத்தினர் என கூறப்படுகிறது. பலியான அனைவரும் மகஜி அகதிகள் முகாமில் தங்கியிருந்து உள்ளனர்.
இதனை, டெய்ர் அல்-பலா பகுதியில் அமைந்துள்ள அல்-அக்சா மருத்துவமனை தெரிவித்து உள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாம் மீது நேற்று மாலை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 21 பேர் பெண்கள் ஆவர். 85 பேர் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் இன்று நடந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.