
சென்னை,
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் 'டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கார்த்தி இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், கார்த்தியை நேரில் சந்தித்த கவுதம் மேனன் கதை ஒன்றைச் சொல்ல, அது கார்த்திக்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளைத் துவங்க சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் கதை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஜெயமோகன் எழுதிய ஐந்து நெருப்பு என்கிற சிறுகதையைத் தழுவி சிம்புவை வைத்து 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், 'வா வாத்தியர்' வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அதேநேரம், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'சர்தார் 2' படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார்.