
புதுடெல்லி,
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார் என்றும், இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும், அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்றும் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு முதலில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு, இந்த விவகாரம் தீவிர கவலைக்குரியது என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் சுப்ரீம்கோர்டில் தாக்கல் செய்தது. அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கவர்னர் வலியுறுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பர்திவாலா பெஞ்ச் முன்பாக நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில், சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பினால் என்ன காரணத்துக்காக அவை திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது என்கிற விவரம் சொல்லப்படுவது இல்லை என்றும், 2-வது முறையாக மசோதாவை கவர்னருக்கு அனுப்பினால் அரசியல் சாசனப்படி அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும், ஆனால் கவர்னரோ, இந்த மசோதாக்களை கிடப்பில் போடுவது அல்லது ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என்கிற போக்குகளை கையாள்கிறார் என்றும், அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்றும் வாதிடப்பட்டது.
இந்தநிலையில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம்கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை ராகேஷ் திவேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தார். அதனைதொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இறுதியில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்து அனைத்து தரப்பும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பை ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்டு. கவர்னர் தரப்பு வாதங்களை நிராகரிக்க வேண்டுமென தமிழக அரசு வாதம் வைத்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.