கழுதைப் பால் வியாபாரத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாருக்கு டாங்கி பேலஸ் நிறுவனம் மறுப்பு

3 months ago 13

நெல்லை : கழுதைப் பால் வியாபாரத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாருக்கு டாங்கி பேலஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நூக்கடல் கிராமத்தை சேர்ந்த பாபு உலகநாதன் என்பவர் ‘டாங்கி பேலஸ்’ என்ற பெயரில் கழுதை பண்ணை ஒன்றைத்தொடங்கி உள்ளார். இதில் கூட்டாளிகளாக கிரிசுந்தர், சோனிக், பாலாஜி, டாக்டர் ரமேஷ் ஆகியோரை இணைத்துக்கொண்டு ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.1600 முதல் ரூ.1800 வரை வழங்குவதாக விளம்பரம் செய்தார். தொடர்ந்து யூடியூப் சேனல்களில் தனக்கு அதிகளவில் கழுதைப்பால் கேட்டு ஆர்டர்கள் வருவதாகவும், ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டு மக்களை நம்ப வைத்தார்.

மேலும் சந்தையில் கழுதைப்பாலுக்கு அதிக தேவை உள்ளது. கழுதைகளை வாங்கவேண்டியுள்ளது. கழுதைகளை வாங்கி பால் உற்பத்தி செய்தால் பெரும் லாபம் கிடைக்கும் எனவும், கழுதை பால் வியாபாரத்தில் முதலீடு செய்தால் சாப்ட்வேர் வேலைக்கு செல்வதை காட்டிலும் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறிவந்துள்ளார். இதனை உண்மை என நம்பிய ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பலர், அந்த நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பினர்.இதற்கிடையில் கழுதைப்பால் விற்பனையில் லாபம் பெறுவது தொடர்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் முதலீட்டாளர்களை கொண்டு பாபு உலகநாதன் குழுவினர், கருத்தரங்கு நடத்தியுள்ளார். இவர்களின் பேச்சால் கவர்ந்திழுக்கப்பட்ட பலர் இதில் இணைந்தனர்.

இதற்காக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் ரூ.5 லட்சம் வசூலித்துள்ளனர். மேலும் கழுதைகளுக்கு சிகிச்சைக்கான முதலீடு எனக்கூறி ரூ.50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும், கழுதைகளின் பால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் வைத்தால் அது கெட்டுவிடும் என்பதால், அதனை பாதுகாக்க பிரிட்ஜ் வேண்டும் எனக்கூறி ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலித்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடி என மொத்தம் சுமார் ₹100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். ஆனால் இதுவரை முதலீட்டாளர்களுக்கு பணத்ைத திருப்பி தரவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கழுதைப் பால் வியாபாரத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாருக்கு டாங்கி பேலஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனக் கிளை அமைத்துள்ள உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.20 கோடி மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் சிலர் கழுதைப் பால் வியாபாரத்தை கெடுக்கும் நோக்குடன் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post கழுதைப் பால் வியாபாரத்தில் ரூ.100 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாருக்கு டாங்கி பேலஸ் நிறுவனம் மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article