கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விவசாயிகள் கொண்டுவந்த தானியங்கள் ரூ.21 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறார்கள். அதில் நேற்று 188 விவசாயிகள், 457 மூட்டை தானியங்களை விற்பனைக்கு எடுத்துவந்தனர்.
அதில் 250 மூட்டை எள், 150 மூட்டை மக்காச்சோளம் மற்றும் உளுந்து, நாட்டுகம்பு, பாசிபயறு, தட்டைபயறு உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்காக கொண்டுவரபட்டன.
இதனை ஆத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். 100 கிலோ எடைகொண்ட மக்காச்சோளம் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.2300க்கும், அதிகபட்சமாக ரூ.2396க்கும் விற்பனை செய்யபட்டது.
எள் ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.5299க்கும், அதிகபட்சமாக ரூ.9700க்கும் விற்பனை செய்யப்பட்டது. உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.2409க்கும், அதிகபட்சமாக ரூ.5469க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாட்டுகம்பு ஒரு மூட்டை குறைந்தபட்டசமாக ரூ.2370க்கும், அதிகபட்சமாக ரூ.2523க்கும் விற்பனை செய்யபட்டது.
கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் தானியங்கள் வரத்து குறைந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு தானியங்கள் ரூ.21 லட்சத்து 15 ஆயிரத்து 960 மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டதாக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சந்தியா தெரிவித்துள்ளார்.
The post கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.21 லட்சம் மதிப்பில் தானியங்கள் கொள்முதல் appeared first on Dinakaran.