பள்ளிபாளையம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், ஒன்றரை வயது பெண் குழந்தையை கொன்றுவிட்டு தமிழகத்தில் பதுங்கிய இளம்பெண்ணை ஜார்க்கண்ட் போலீசார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜக்ரதாபூர், இன்கட்டா கிராமத்தை சேர்ந்தவர் துகிபோத்ரா (21). இவரது கணவர் ரமேஷ்காக்ரி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை (ஒன்றரை வயது). திருமணத்திற்கு முன்பு, துகிபோத்ரா நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகில் உள்ள வெப்படையில் சில மாதங்கள் தங்கி ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பின், கணவருடன் சொந்த ஊரில் தங்கி வேலை செய்து வந்தார். குழந்தை பிறந்த பிறகு இவருக்கு அங்குள்ள ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. துகிபோத்ரா, தனது கணவன் ரமேஷ்காக்ரியிடமிருந்து பிரிந்து, கள்ளக்காதலனுடன் பள்ளிபாளையம் வந்து தனியாக வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்த திட்டமிட்டார். ஆனால் இதற்கு குழந்தை இடையூறாக இருந்து வந்துள்ளது. இதனால் துகிபோத்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று அங்குள்ள குட்டையில் வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து ஜக்கரதாபூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் குழந்தையை கொலை செய்த துகிபோத்ரா, பள்ளிபாளையம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜார்க்கண்ட் போலீசார் நேற்று பள்ளிபாளையம் வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன், வெப்படையில் உள்ள நூற்பாலையில் வேலை செய்த துகிபோத்ராவை கைது செய்தனர். பின்னர் அவரை ஜார்க்கண்ட் அழைத்துச்சென்றனர்.
The post கள்ளக்காதலுக்கு இடையூறு குழந்தையை கொன்று வீசிய இளம்பெண் கைது appeared first on Dinakaran.