கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் சிறுவனை அடித்துக்கொன்ற பெரியப்பா

1 day ago 1

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50). இவருடைய மனைவி முத்து. இவர்களுடைய மகன் கார்த்திக் (13). 8-ம் வகுப்பு முடித்துள்ளான். இவர்களது வீட்டின் அருகே லட்சுமணனின் அண்ணன் ராமர் (54) வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று லட்சுமணனும், அவருடைய மனைவி முத்துவும் வெளியே சென்று இருந்தனர். சிறுவன் கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். சற்று நேரத்தில் முத்து திரும்பி வந்து பார்த்தபோது கழுத்தில் சேலை சுற்றிய நிலையில் கார்த்திக் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் காரியாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிேசாதனையில், கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. எனவே இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பேரில் சிறுவனின் பெரியப்பாவான ராமரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ராமருக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. சம்பவத்தன்று அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரச்சொல்வதற்காக கார்த்திக்கிடம் செல்போனை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவன் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராமர், சிறுவன் கார்த்திக்கை அடித்து உதைத்து கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளி உள்ளார். இந்த கொடூர தாக்குதலில் கார்த்திக் இறந்தான். சேலையை சுற்றி விளையாடியபோது கழுத்து இறுகி அவன் இறந்ததாக மற்றவர்களை நம்ப வைக்க முயற்சித்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ராமரிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read Entire Article