
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா மாகவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரும், அருவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா என்பவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ரவி பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ரவியின் உறவினர் பிரதீப் என்பவர் அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது லாவண்யாவுக்கும், பிரதீப்புக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ரவிக்கு தெரியவந்தது.
அவர் தனது மனைவி லாவண்யாவையும், பிரதீப்பையும் கண்டித்து வந்தார். இருப்பினும் இருவரும் தங்களது கள்ளக்காதலை கைவிடவில்லை. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதையடுத்து லாவண்யா கர்ப்பம் அடைந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ரவி, அடிக்கடி தனது மனைவி லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் லாவண்யாவிடம், ரவி தகராறில் ஈடுபட்டார். அப்போது லாவண்யா, இந்த குழந்தை உங்களுக்கு பிறக்கவில்லை என்று ரவியிடம் கூறினார். மேலும் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அவர் தன்னுடைய கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். தனது மனைவியை ரவி பல இடங்களில் தேடினார். ஆனால் லாவண்யா கிடைக்கவில்லை. இதன்காரணமாக மனமுடைந்த ரவி வீட்டின் அருகே ஓடும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்த ஒலேநரசிப்புரா புறநகர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ரவியின் உடலை ஆற்றில் இருந்து மீட்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.