சென்னை: தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி திருப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்வி கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் மாணவர்கள் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.
அரசியல் கட்சிகள் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் வழங்குவதை தடுக்க விதிகளை வகுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கல்வி கடன் தள்ளுபடி வாக்குறுதியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், மற்றும் நீதிபதி சுந்தரமோகன் அமர்வு, இதுபோன்ற உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும் என்று மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post கல்விக்கடன் ரத்து வாக்குறுதியை நிறைவேற்ற கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.