
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு பல நீர் வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. அதோடு மலை கிராமங்களும் உள்ளன. இவர்கள் பயன்படுத்தும் வகையில் மலையில் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்த நிலையில், கொடுந்துறை -மேல்பரிகம் இடையே மலைப்பாதையில் சாலையோரம் அமைக்கப்பட்ட தடுப்பு சுவர், சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சரிந்து விழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை ஓரத்தில் தரைமட்ட அளவில் தடுப்பு சுவர் அமைத்து இருந்தனர். இது விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் இருந்தது.
இந்த தடுப்புச்சுவர் விபத்தை தடுக்கவா? அல்லது உயிரை எடுக்கவா? என வாகன ஓட்டிகள் புலம்பி வந்தனர். இதுபற்றி 'தினத்தந்தி'யில் கடந்த 27-ந்தேதி வெளியான இதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு, தடுப்பு சுவரை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
இதன் எதிரொலியாக, மாவட்ட கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் மணிமொழி மேற்பார்வையில் சாலை மட்டத்திற்கு இருந்த தடுப்பு சுவரை 2 அடி உயரத்துக்கு உயர்த்தி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது இதற்கான பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மலைப்பாதையை பயன்படுத்தி வரும் மலைகிராம மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.