
மும்பை,
மும்பை வில்லேபார்லே பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் நாலச்சோப்ராவை சேர்ந்த சந்தியா பாதக் (வயது21) 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை மாணவி வழக்கம்போல கல்லூரிக்கு வந்திருந்தார். அவர் கல்லூரியின் 3-வது மாடியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் படுகாயமடைந்த மாணவியை கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே மாணவி தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர். இதையடுத்து கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.