சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949ம் ஆண்டு டிசம்பரில் 20ல் பிறந்தவர் ராஜேஷ். பள்ளி ஆசிரியர் பணியை துறந்து அரிதாரம் பூசி சினிமாவில் நடித்தார். 1974ல் கே.பாலசந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். வெள்ளித் திரையில் அறிமுகமான முதல் படம் இது. கன்னிப் பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையே இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகர் ராஜேஷ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;
ராஜேஷ் என்ற மனிதரின்
பெளதிக உடலுக்கு
மூன்று மரணங்கள்
நேர்ந்திருக்கின்றன
ஒரு கலைஞன்
ஒரு முற்போக்குச் சிந்தனையாளன்
ஓர் எழுத்தாளன் என்ற
மூன்று இழப்புகள்
ஒரே நேரத்தில் நேர்ந்துவிட்டன
கலை உலகம்
அரசியல் உலகம்
அறிவுலகம் குறித்த
தீர்க்கமான சிந்தனையாளர்
திடீரென்று மறைந்துவிட்டார்
என் அன்னையின் மறைவுக்கு
இரங்கல் தெரிவிக்க
10 நாட்களுக்கு முன்பு
வந்துசென்றவர்க்கு
இன்று நானே
இரங்கல் செய்தி சொல்வது
சுமக்க முடியாத துக்கமாகும்
மரணம்
இயற்கையெனினும்
இயல்பாக எடுத்துக்கொள்ள
இயலவில்லை
அவரது உயிர்
கலையமைதி கொள்ளட்டும்
ஆழ்ந்த இரங்கல்
அனைவருக்கும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post கலை உலகம், அரசியல் உலகம், அறிவுலகம் குறித்த சிந்தனையாளர் மறைந்துவிட்டார்: நடிகர் ராஜேஷ் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்!! appeared first on Dinakaran.