2வது நாளாக எடப்பாடி ஆலோசனை மாநிலங்களவை சீட்டை கூட்டணி கட்சிக்கு கொடுக்க அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு

1 day ago 4

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில, தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனாலும், இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று 2வது நாளாக அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதில், திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 41 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திலும், மாநிலங்களவை தேர்தலில் 2 இடங்களுக்கு வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பேசிய பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

அதனால் தேமுதிகவுக்கு ஒரு சீட் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தேமுதிகவுக்கு தற்போது பெரிய அளவில் வாக்கு வங்கியும் இல்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய லாபம் எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதனால், அதிமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் இரண்டு பேருக்கு மட்டுமே அதிமுக சார்பில் மாநிலங்களவை சீட் வழங்க வேண்டும்.

குறிப்பாக, தென் மாவட்டங்களை சேர்ந்த ஒரு நபருக்கும், வடமாவட்டத்தை சேர்ந்த ஒரு கட்சி நிர்வாகிக்கும் எம்பி பதவி வழங்க வேண்டும். இதன்மூலம் அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவார்கள். இதை கருத்தில் கொண்டு கட்சி தலைமை செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

* த.வெ.க. பற்றி விமர்சிக்க தடை
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, விரைவில் மாநிலங்களவைக்கு போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த கூட்டத்தில் எடப்பாடி பேசும்போது, தவெக தலைவர் விஜய் பற்றி விமர்சிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.

* எடப்பாடியுடன் எல்.கே.சுதீஷ் சந்திப்பு
மாநிலங்களவை இடம் வழங்க வேண்டும் என அதிமுகவிடம் தேமுதிக கேட்டு வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் நேற்றிரவு சந்தித்து பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதிமுக மாநிலங்களை சீட் வழங்கும் பட்சத்தில் தேமுதிக சார்பில் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post 2வது நாளாக எடப்பாடி ஆலோசனை மாநிலங்களவை சீட்டை கூட்டணி கட்சிக்கு கொடுக்க அதிமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article