கலவரத்தை தூண்ட சங்கிகள் காத்திருப்பு ஆர்.எஸ்.எஸ், பாஜவுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை: குஜராத், உ.பி.யில் முருகன் மாநாடு நடத்த முடியுமா? செல்வப்பெருந்தகை சூடான கேள்வி

1 week ago 4

கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நிதியை கொடுக்காமல், ஒன்றிய அரசு வேறு மாநிலங்களுக்கு நிதியை கொடுக்கிறது. இதற்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பதில் சொல்ல வேண்டும். மக்களை பதட்டதோடும், அச்சத்தோடும் வைத்திருக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ், பாஜ நினைக்கின்றது. இதற்காக தான் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். முருகன் மாநாட்டை குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தி இந்து கடவுள்களை சமமாக வைத்திருப்பதை காட்ட வேண்டும். வடமாநிலங்களை போல தென் மாநிலத்தில் கலவரத்தை தூண்ட முடியுமா? என சங்கிகள் காத்திருக்கின்றனர்.

பாஜ விரும்பியதை போல தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழ்நாடு மற்றும் தென் மாநில பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும். வடமாநில பிரதிநிதித்துவம் உயரும். வடமாநில பிரதிநிதிகளே அனைத்தையும் முடிவு செய்து கொள்வார்கள். அமித்ஷா வருகை மூலம் தமிழகத்தில் ஏதாவது குழப்பம் செய்யலாமா?, கால் ஊன்றலாமா? என முயற்சி எடுத்து பார்க்கின்றனர். அவர்களின் எந்த திட்டமும் நிறைவேறாது. பாஜவிற்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை. ஒன்றிய அரசிடம் உரிமையை கேட்கின்றோம். தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்ட இருப்பார்கள், முதல்வர் அமைதியாக இருக்க வேண்டுமா?. இவ்வாறு அவர் கூறினார்.

* 1000 இருக்கை எதற்கு? எடப்பாடிக்கு குட்டு
செல்வப்பெருந்தகை கூறுகையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வராததை வருவதாக பூச்சாண்டி காட்டுவதாக மறுசீரமைப்பு குறித்து பேசி இருக்கிறார். ஆயிரம் இருக்கைகள் அங்கு போடப்பட்டதற்கு காரணம் என்ன?. இதில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் எவ்வளவு இருக்கும்?. இப்போது எம்பிக்கள் 10 நிமிடத்திற்கு மேல் பேச முடிவதில்லை. எம்பிகளின் எண்ணிக்கை உயர்ந்தால் இரண்டு நிமிடம் கூட நேரம் கிடைக்காது. இதெல்லாம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு புரிகின்றதா? இல்லையா? புரிந்து கொண்டு இப்படி பேசுகின்றாரா என தெரியவில்லை’ என்றார்.

The post கலவரத்தை தூண்ட சங்கிகள் காத்திருப்பு ஆர்.எஸ்.எஸ், பாஜவுக்கு தமிழ் மண்ணில் இடமில்லை: குஜராத், உ.பி.யில் முருகன் மாநாடு நடத்த முடியுமா? செல்வப்பெருந்தகை சூடான கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article