கோவில்பட்டி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு, சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு இன்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது.