
பெங்களூரு,
கர்நாடகத்தில் மதுபான விலை குறிப்பாக பீர் விலை ஏற்கனவே 2, 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறை மீண்டும் அவற்றின் விலையை உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பீர் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக கடந்த பிப்ரவரியில் பீர் விலை உயா்த்தப்பட்டது. அடுத்த 2 மாதங்களில் மீண்டும் அவற்றின் விலை அதிகரிக்கப்பட இருக்கிறது. அதாவது தற்போது பீர் மீதான கலால் வரி 195 சதவீதமாக உள்ளது. இதனை 205 சதவீதமாக உயர்த்த கலால் துறை முடிவு செய்துள்ளது. இதனால் பீர் விலை பாட்டிலுக்கு ரூ.10 உயரும் என தகவல் வெளியாகி இருகிறது. இதனால் மதுப்பிரியர்கள் அரசு மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு தனது வருவாயை அதிகரித்துக்கொள்ள நினைத்தால் மதுபான விலையை உயர்த்தி விடுகிறது என்று மதுப்பிரியர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த விலை உயர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.