
கரூரில் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்தில் இருந்து இறங்கி சகமாணவிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்றபோது மர்ம நபர்கள் ஆம்னி வேனில் வந்து மாணவியை கடத்தியுள்ளனர். இதுகுறித்து சக மாணவிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை ஒருதலையாக காதலித்த பக்கத்து ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் வந்து கடத்தியதாக தகவல் வெளியானது. மாணவியை கடத்திய ஆம்னி வேன் கரூர்- திண்டுக்கல் மாவட்ட எல்லையான வெள்ளோடு பகுதியை கடந்து சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், கல்லூரி மாணவி ஆம்னி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக எஸ்.பி. உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.