கருத்து முரண்கள் இருந்தாலும் கட்டுக்கோப்பு திமுக கூட்டணியில் விசிகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை: திருமாவளவன் உறுதி

4 hours ago 1

மதுரை: திமுக கூட்டணியில் விசிகவிற்கு எந்த நெருக்கடியும் இல்லை என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதிப்படி, அனைத்து சமூகத்தினருக்கும் உரிய இடம் அளிக்கக் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் பங்கேற்று பேசினார்.பின்னர் அவர் அளித்த பேட்டி:

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேரை நியமனம் செய்ய உள்ளனர். இதில், அனைத்து பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களையும் நியமிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் உள்ள சில சமுதாயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீதிமன்ற நியமனங்களில் இல்லை என்ற முறை உள்ளது. இதில், அரசு கவனம் செலுத்த வேண்டும். சமூக நீதியை பின்பற்றுவதற்கு உரிய வழிகாட்டுதல்களை அரசும், சட்டத்துறையும் வழங்க வேண்டும்.

திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கருத்து முரண்கள் இருந்தாலும் கூட கட்டுக்கோப்பாக, ஒற்றுமையோடு இருக்கிறோம் என்பது தான் அவர்களுக்கு உள்ள சிக்கல். ஆகவே, இல்லாதது பொல்லாததை இட்டுக்கட்டி பேசுகிறார்கள். மற்றபடி அதில் சொல்வதற்கு எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே வெளிப்படையாக தான் அனைத்து பிரச்னைகளுக்கும் போராடி வருகிறோம். திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.

திமுக கூட்டணியில் விசிகவும் ஒரு அங்கம். திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிகவுக்கும் பங்கு உள்ளது. அதேபோல அதை காப்பாற்றுவதற்கான பொறுப்பும் விசிகவுக்கு உள்ளது. அனைத்து பொறுப்புகளையும் ஏற்று செயல்படக்கூடிய கட்சியாகத்தான் விசிக உள்ளது. எந்த இடத்திலும் பலவீனப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் தான் பணியாற்றிய மதுரை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு திருமாவளவன் நேற்று சென்று பார்வையிட்டார்.

 

The post கருத்து முரண்கள் இருந்தாலும் கட்டுக்கோப்பு திமுக கூட்டணியில் விசிகவுக்கு எந்த நெருக்கடியும் இல்லை: திருமாவளவன் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article