
பெங்களூரு,
நடிகர் கமல்ஹாசன், முன்னணி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 'தக் லைப்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும் கன்னட அமைப்பினர், எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கமல்ஹாசனை கண்டித்தும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தான் கூறிய கருத்திற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் கூறிவிட்டார். இதனால் கன்னட அமைப்பினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசிய விவகாரம் தொடர்பாக கமலின் புகைப்படத்தை, ஒருவர் தீ வைத்து கொளுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து கன்னட யுவ சேனை அமைப்பை சேர்ந்தவர் மீது பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.