
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த வருடம் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.
இதில் ஜூன் 29-ந் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 177 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்காவுக்கு கடைசி 5 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பிரமாதமாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவை 169 ரன்னில் கட்டுப்படுத்தினர்.
இதனால் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 17 ஆண்டுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை உச்சிமுகர்ந்தது. அந்த சூழலில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இந்நிலையில் டி20 தொடரில் ஏற்பட்ட நினைவுகளை இந்திய கேப்டன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், "இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன் தேவை என்ற சூழலில் அந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். டேவிட் மில்லர் தூக்கியடித்த முதல் பந்தை, எல்லைக்கோட்டை ஓட்டி சூர்யகுமார் யாதவ் கேட்ச் செய்ததும், கள நடுவர்கள் அது சரியான கேட்ச் தானா என்பதை உறுதி செய்ய 3-வது நடுவரிடம் முறையிட்டனர். அந்த தருணத்தில் நாங்கள் அனைவருமே மிகுந்த பதற்றத்திற்கு உள்ளானோம்.
நான் சூர்யகுமாருக்கு நேர் எதிராக நின்றதால் பந்து சிக்சருக்கு சென்று விட்டதாகவே நினைத்தேன். அவர்களுக்கு 5 பந்துகளில் 10 ரன் தேவை என்று யோசிக்க தொடங்கிவிட்டேன். அந்த கேட்ச்சை பிடிக்க சூர்யகுமாருக்கு கடுமையான முயற்சி தேவைப்பட்டு இருந்திருக்கும். ஏனெனில் பந்து அந்தரத்தில் இருந்தபோது எளிதாக எல்லைக்கோட்டை தாண்டுவது போலவே தோன்றியது.
கேட்ச் குறித்து நடுவர்கள் ரீப்ளேயில் ஆய்வு செய்தபோது, நான் சூர்யகுமார் அருகே வந்து விட்டேன். அப்போது அவரிடம். 'இது கேட்ச்சா இல்லையா என்பதை நீங்கள் சொல்லுங்கள். நான் பெரிய திரையை பார்க்க விரும்பவில்லை' என்று கூறினேன். உடனே அவர் கேட்ச் செய்து விட்டேன் என்று சொன்னார். பந்தோ அல்லது அவரது கால்களோ எல்லை கோட்டை தொட்டால், கயிறு நகரும்.
ஆனால் அப்படி நடக்கவில்லை. அதை பார்த்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனாலும் அது பெரிய திரையில் வரும் வரை 3-வது நடுவர் என்ன நினைக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சூர்யகுமாரின் இந்த கேட்ச்தான் ஆட்டத்தின் முக்கிய தருணம், திருப்பு முனையாகும்" என்று கூறினார்.