கனமழை எச்சரிக்கை...மும்பை - டெல்லி ஆட்டம் நடைபெறுமா..?

7 hours ago 5

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.

டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு போட்டிகளிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். இந்நிலையில், மும்பையில் இன்று கனமழை பெய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மழை பெய்யும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் மும்பை - டெல்லி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், ஐ.பி.எல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் 23-ந் தேதி ஆர்.சி.பி- சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருந்தன. ஆனால், முன்னதாக, பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த பெங்களூரு - ஐதாராபாத் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article