சென்னை: கண்ணதாசன் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜூன் 24) அமைச்சர் பெருமக்கள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசின் சார்பில், கவியரசு கண்ணதாசனின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெருமைகளைப் போற்றி அமைச்சர் பெருமக்கள், 24.6.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராய நகர், கோபதி நாராயண சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
கவியரசு கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் சாத்தப்பன்-விசாலாட்சி தம்பதியருக்கு மகனாக 24.6.1927 அன்று பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா. சிறுகூடல்பட்டி பள்ளியில் ஆரம்பக் கல்வியும், அமராவதி புதூரில் பள்ளிப் படிப்பையும் பயின்றார். கவியரசு கண்ணதாசன் தமது இளமைப் பருவத்தில் எழுத்தாற்றலில் மிகுந்த ஆர்வமும், புத்தகங்களை வாசிப்பதில் அதிக நாட்டமும் கொண்டிருந்தார். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கண்ணதாசன் கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், பெரும்புலவன் பாரதியாரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டவர்.
கவியரசு கண்ணதாசன் கவிதைகள், இலக்கியம், சிறுகதைகள், நாடகங்கள் போன்றவற்றில் தனித்தன்மையோடு சிறந்து விளங்கினார். திருமகள், திரை ஒலி. மேதாவி. சண்டமாருதம், தென்றல், கண்ணதாசன் மாத இதழ், கடிதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். இவர் படைத்த இலக்கியங்களில் மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி ஆகியவை மிகச் சிறந்து விளங்கிய காவியங்களாகும். மேலும், 20க்கும் மேற்பட்ட நவீனங்கள் மற்றும் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். கவியரசு கண்ணதாசன் சிறப்பான கவிதைத் தொகுப்புகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவர் எழுதிய நாடகங்களில் அனார்கலி, சிவகங்கை சீமை, ராஜதண்டனை. அருணோதயம் ஆகியவை சிறந்த நாடகங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக, அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் ஆகியவை எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்றவை.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் “அழகி” எனும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். திரைப்படத் துறையில் தனது முதற்பாடலை ‘கன்னியின் காதலி’ என்ற திரைப்படத்திற்கு எழுதினார். இதனைத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனமும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.1970 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு, மாநில அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞரானார். 1979 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார். தனது சிறப்பான பாடல்கள் மூலம் உலகிலுள்ள தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ள கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தும் மறையாமல் நிலைத்த புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 24ஆம் நாள் அவருடைய பிறந்த நாளுக்குச் சிறப்புச் சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா சென்னையிலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 24.6.2025 அன்று காலை கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில், அவரது திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலையணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். அவ்வமயம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். மேயர், துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள். குறிப்பிடப்பட்டள்ளது.
The post கண்ணதாசன் 99ஆவது பிறந்த நாள்: நாளை அமைச்சர் பெருமக்கள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள் appeared first on Dinakaran.