
லக்னோ,
டெல்லியை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், தனது பெயர் மற்றும் விவரங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் மர்ம நபர்கள் பேக் ஐ.டி. ஒன்றை தொடங்கி இருப்பதாகவும், அதன் மூலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை அவர்கள் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலிசார், சந்தப்பட்ட பேக் ஐ.டி. எந்த மொபைல் எண் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்தனர். அந்த சிம் கார்டு உத்தர பிரதேச மாநிலம் காசிபூர் பகுதியில் வாங்கப்பட்டது தெரிய வந்தது. அதை வைத்து அதன் உரிமையாளரின் தற்போதைய இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதன்படி டெல்லியின் நங்லோலி பகுதியில் வசித்து வரும் 26 வயது இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து சிம் கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பேக் ஐ.டி. மூலம் சமூக வலைதளத்தில் இளம்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது கணவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் இளம்பெண் ஒருவர் இருந்துள்ளார். அந்த பெண்ணுக்கும் தனது கணவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் தனது கணவரின் மொபைலில் இருந்து அந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
அதற்கு அந்த பெண் பதில் அனுப்பவில்லை. பின்னர் தனது கணவர் மீது சந்தேகம் கொண்டு இளம்பெண்ணின் பெயரில் பேக் ஐ.டி. தொடங்கி, கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் இளம்பெண்ணின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.