கணவரை போலீசில் சிக்க வைத்த மனைவி: காரணம் கேட்டதும் அதிர்ந்த போலீசார்

1 day ago 3

சென்னை,

தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் ஒரு பெண் பேசினார். அவர், கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி அங்கு பெண் ஒருவர் 10 கிலோ கஞ்சாவுடன் தங்கி இருப்பதாகவும், அதனை வேறு ஒருவருக்கு கைமாற்ற உள்ளார். உடனடியாக சென்றால் பிடித்து விடலாம் என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

உடனடியாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று குறிப்பிட்ட அந்த வீட்டின் கதவை தட்டினர். கதவு திறக்கப்பட்ட உடன் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

அங்கு ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. போலீசார் அறையை சோதனை செய்தனர். அங்கு கஞ்சா எதுவும் சிக்கவில்லை. பிறகு இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தது அந்த நபரின் மனைவி என்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் காரணத்தை கேட்டதும் போலீசார் அதிர்ந்துவிட்டனர். தன்னுடன் வாழாமல் அங்கு இருந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு இருவரும் அடிக்கடி வெளியே சென்று தங்கி உல்லாசமாக இருந்ததால் இருவரையும் சிக்க வைக்க கஞ்சா வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை அந்த பெண்ணை வரவழைத்த போலீசார் பொய்யான தகவலை சொல்லக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். மேலும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Read Entire Article