
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹிரேகேரூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கோடா கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரவ்வா (வயது 40). திருமணமான இவர் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி பக்கிரவ்வா ஹிரேகேரூர் பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் ஹிரேகேரூர் அரசு ஆஸ்பத்திரியில் பக்கிரவ்வாவின் பிணம் இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த அவர்கள் பக்கிரவ்வாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஹிரேகேரூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்மநபர் யாரோ அவரை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து ஹிரேகேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.